Gender Talks in Tamil - 13: Life as an Intersex person

வலியும் வேதனையும் அதனை அனுபவிப்பருக்கு மட்டும் தான் தெரியும். வெளியில் நின்று கொண்டு வியாக்கியானம் பேசும் யாருக்கும் அதனை உணர முடியாது. அப்படி உணர்ந்து நெருங்குவதற்கான தொலைவும் மிக குறைவுதான்.

இப்படி தான் பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத நிறைய நபர்கள் நம் கண்முன்னே வலிகளோடும், வேதனைகளோடும், பலரது வக்கிரங்களையும் சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தவார ”பாலின பாலியல் பாலீர்ப்பு பேசுவோம்” நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சக்தி ஸ்ரீ மாயா அவர்கள் கலந்து கொண்டார்கள். ஒரு இடைபால் நங்கையான மாயா அவர்கள் தனது வாழ்வில் கடந்து வந்த கரடு முரடான பாதையின் வெம்மையையும், கூர்மையான குத்தும் முள் போன்ற சமூக பார்வையையும் எதிர் கொண்ட விதம் அவரது வலிமையின் உச்சத்தை காட்டுகிறது.

இயற்கையானது நமக்கு பல ஆச்சரியங்களை நித்தம் அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி நமது உடலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நமது உடல் எப்போதும் முழுமையான ஆண் என்றொ முழுமையான பெண் என்றோ வடிவமைவதில்லை. முதலில் பால் தன்மை என்பது ஆண் பெண் என்ற இரு பால் நிலை மட்டுமே இல்லை என்பதை நாம் உணரும் போது தான் இயற்கையான உடலமைவையும் ஏற்றுகொள்ள முடியும்.

நாம் போட்டிருக்கும் கண்ணாடி அழுக்கு படிந்து இருக்கும் போது நாம் காணும் உலகமும் அழுக்காகவும், அசிங்கமாகவும் தான் தெரியும். கண்ணாடியை சுத்தப்படுத்தி பார்க்கும் அறிவியல் மனப்பான்மை நம்மில் வளர்ந்தால் ஒழிய இந்த உலகமும் அதன் இயற்கையான படைப்புகளும் அழகாகவும், ரசிக்கும் படியாகவும் தெரியாது.

மாயா அவர்களின் பேச்சின் முடிவில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டது இது தான். மாயா அவர்களை தொடந்து ரியா அவர்களும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

நீங்களும் கேட்டுபாருங்கள்.. உங்களுக்கும் கண்ணாடியை துடைத்து பார்க்க வேண்டியது வரலாம்.

நன்றி !!